Saturday, 15 October 2011

புரியவில்லை..

                                                                    

மொட்டைமாடியில்
சாய்ந்து நிற்கும்
தென்னங்கீற்றின் பின்னால்
பரீட்சைக்கு
தீவிரமாக
அவள் ...

நானும்
அதே தீவிரமான
பாசாங்குடன்
எதிர்மாடியில் ...

இரு புருவங்களின்
மத்தியில்
பேனாவின் பின்முனையால்
 தட்டியபடி
அவள் திரும்ப ....

ஆள்காட்டி விரலால்
காற்றில் வரைந்து,
மனனம் செய்ததை
எழுதிப்பார்க்கும்
என் நடிப்பு ...

எட்டு வருடங்கள்
ஆகிவிட்டது
வீடு காலி செய்து .....

இன்னும் எனக்குப்
புரியவில்லை ......

இருட்டிய பிறகும்
விளக்கில்லாத அந்த
மொட்டைமாடியில்,
என்ன
படித்துக்கொண்டிருந்தாள் ..?





(என் ஆரம்பகால முயற்சி கவிதைகள்  ....என் முகப்புத்தக நண்பர்களுடன்.....)

மீண்டும் ஒருமுறை....

                                                                


 எத்தனையோ இரவுகள்
எப்படி எப்படியோ
 கடந்துவிட்டன...

எத்தனையோ அதிகாலைகள்
வந்து வந்து
போய்விட்டன....

எத்தனையோ உணர்வு மாற்றங்கள்,
உணர்ச்சிக் கொந்தளிப்புகள்....

ஆனாலும் என் உணர்வின்
சுவாசத்தை இன்னும்
உயிர்ப்போடு வைத்திருப்பது...,
உன் கால்மேல் கால்போட்டு
உன் நெஞ்சாங்கூட்டின்
அரவணைப்பில் நான் நுகர்ந்த
அந்த வாசனை.....

சுவற்றில் புகைப்படமாய்
மாறிப்போன உன்னிடம்
கேட்கிறேன்......

"அம்மா...
என்னை அணைத்துக் கொள்வாயா...
மீண்டும் ஒரு முறை...?"

வாழ்கோட்டுச் சித்திரம்

                                                   



லட்சங்களில் ஒன்றைத்
துளைத்துவென்ற
மோதல்களின் இறுதியில்
துவங்கும் ஆரம்பம்


குளம்பிப் பிசைந்ததும்
நறுமணமாய் பரவும்
சவ்வாது கலந்த
சந்தனக்கீற்றுகளாய்
பூரிப்பும் பொலிவும்


விளைந்து வழியும்
பூங்கொல்லைகளில்
துரிதமாய் நடக்கும்
பூப்பறிப்பும் பூப்பிறப்பும்
காய்ந்த பூக்களை மிதித்தபடி


அடித்துச்செல்லும்
காலவெள்ளத்தில்
கசடுகளாய் ஒதுக்கப்படும்
தேவைப்பொறுக்கலும்
ஆசைச்சுருக்கலும்


எங்கோ கேட்கும்
ஊர்க்குருவியின் கதறலை
அவதானிக்க மறந்த
சுவாதீனமில்லாத
கூட்டுப்புழுக்களுடன் தொடரும்
சாத்வீக சதிராட்டம்


ஒரு
நமட்டுச்சிரிப்பை மட்டும்
இறுதியில் தந்துசெல்லும்
இருப்பின் நிறைவும்
இழப்பின் வலிகளும்....