Friday, 6 January 2012

யாரோ ஒரு கனவில்...




பிறப்பில்லா வாலிபனாகி
பெயரில்லா காட்டுக்குள்,
நான் நிற்க எல்லாம் கடக்க
அதிவேக நிதானமாய் என் ஓட்டம்.
மரங்களின் அடர்த்தியில் மைல்கள் மறைய
தாவிக் குதித்து மேலே பறக்கிறேன்
என்னைக் கடந்து சிரித்து மறைந்தது
கடிகாரம் கட்டிய சிட்டுக்குருவி
மேகப் புகையொன்று கடக்கும் தருணம்
கடலின் பரப்புகளில் பாய்ந்து செல்கிறேன்
எதிரே கடந்த திமிங்கலம் முதுகில்
கழுத்தில்லா செஷாயர் பூனை ஒன்று
துள்ளிக் குதித்து விளையாடிச் சென்றது
ராட்சத அலையொன்று வளைத்துச் சுருட்ட
சதுரங்க கட்டங்களில் காய்களாய் நகர்கிறேன்
மன்னனை வீழ்த்தி வெற்றியில் களித்து
பானமும் பார்வையும் ஒருங்கே பரிமாற
அரண்மனை கேளிக்கைகளின் நடுவே அவள்,
தனிமை நெருக்கத்தில் கண்கள் மூட
சுகமாய் எனது பயணமும் தொடர்ந்தது
இன்பங்களடர்ந்த முடிவற்ற சாத்தியங்களுடன்
அவளின் கனவில்....!

மார்கழி இரவுகள்...

                       


இரவின் நிசப்த காகிதத்தில்
நவீன ஓவியமாய்
வண்டுகளின் ரீங்காரம்...

பல்வேறு ப்ருகா கமகங்களுடன்
தவளைகளின் இசைச் சங்கமம்

வாடையின் கரிசனத்தால்
சவாசனத்தில் மின்விசிறிகள்...

பனிகோர்த்த புள்ளிகளில்
வாகன இருக்கைகள்...

இலவச இணைப்பாய்
இருமலும் தும்மலும்....

நெருக்கத்தை உணர்த்தும்
இடைவெளி இறுக்கத்தில்
தளர்ச்சித் தனிமைகள்...

வழிபிறக்கும் தை நோக்கி
கற்பனை- கனவுகள் சுமந்து
கம்பளிக்குள் சுகமாய்
என் மார்கழி இரவுகள்....