பிறப்பில்லா வாலிபனாகி
பெயரில்லா காட்டுக்குள்,
நான் நிற்க எல்லாம் கடக்க
அதிவேக நிதானமாய் என் ஓட்டம்.
மரங்களின் அடர்த்தியில் மைல்கள் மறைய
தாவிக் குதித்து மேலே பறக்கிறேன்
என்னைக் கடந்து சிரித்து மறைந்தது
கடிகாரம் கட்டிய சிட்டுக்குருவி
மேகப் புகையொன்று கடக்கும் தருணம்
கடலின் பரப்புகளில் பாய்ந்து செல்கிறேன்
எதிரே கடந்த திமிங்கலம் முதுகில்
கழுத்தில்லா செஷாயர் பூனை ஒன்று
துள்ளிக் குதித்து விளையாடிச் சென்றது
ராட்சத அலையொன்று வளைத்துச் சுருட்ட
சதுரங்க கட்டங்களில் காய்களாய் நகர்கிறேன்
மன்னனை வீழ்த்தி வெற்றியில் களித்து
பானமும் பார்வையும் ஒருங்கே பரிமாற
அரண்மனை கேளிக்கைகளின் நடுவே அவள்,
தனிமை நெருக்கத்தில் கண்கள் மூட
சுகமாய் எனது பயணமும் தொடர்ந்தது
இன்பங்களடர்ந்த முடிவற்ற சாத்தியங்களுடன்
அவளின் கனவில்....!
No comments:
Post a Comment